ஶ்ரீமத்பகவத்கீதை: 4
மன அழுத்தத்தில் அர்ஜுனன்:
பகவத்கீதைக்கு நூற்றுக்கணக்கான விரிவுரைகள் வந்துள்ளன. ஆனால் ஒவ்வொருவரும் தான் சார்ந்திருக்கும் கோட்பாடுகளான அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம் என்பனவற்றில் ஏதாவது ஒன்றை கீதையில் கண்டு , அதையே உயர்வாக எழுதியிருக்கின்றனர். கீதையைப் பக்திநூல், யோகசாஸ்திரம், ஞானமார்க்கம், என்றெல்லாம் அவரவர் விருப்பப்படி நிறுவலாம்; ஆனால் கிருஷ்ணர் கூறும் வேதாந்தம் அனைத்தையும் உள்ளடக்கியதே.
குருஷேத்திரம்:
பார்த்தா! நீ ஆத்ம போதம் அடையப் பெற்றவனாக ஆவாயாக! உனது பேரியல்பில் நிலைபெற்றிரு! நீ தவறாது உன் கடமையைச் செய்! என்றெல்லாம் சிந்தைத் தடுமாறி, மனம் கலங்கி நின்ற அர்ஜுனனுக்குக் கிருஷ்ணர் போதித்தார்.
போர்க்களத்தில் எவ்வாறு இத்தனை நேரம் கிருஷ்ணர் பேசியிருக்க முடியும் என்றால், அவர் சுலோகங்களாகவே கூறியிருப்பதால் அவற்றை கூற அதிக நேரம் ஆகாது கீதையின் விளக்கவுரைகளே பெரியது.
குரு வம்சத்தை நிறுவிய சக்ரவர்த்தி ‘குரு’ தவம் செய்த இடமே ‘குருஷேத்திரம்’.
இது ஹரியானா மாநிலத்தில் உள்ளது. மாபெரும் சமவெளிப் பரப்பில் கௌரவவர்களின் மாபெரும் சேனையும், பாண்டவர்களின் சேனையும் போருக்குத் தயாராக நின்றனர்.
கௌரவர்களின் சேனாதிபதியாகப் பீஷ்ம பிதாமகர் நின்றிருக்கக் குலகுரு கிருபர், குரு துரோணர் முதலியோர் முன்னணியில் நிற்க, தன் பிரியமான தாத்தா பீஷ்மரையும் , குருவையுமே எவ்வாறு எதிர்த்துப் போரிடுவது எனக் கலங்கினான் விஜயன்.
பாண்டவப்படையில் திரௌபதியின் தமையனான திருஷ்டதுய்மன் சேனாதிபதியாகப் பொறுப்பேற்றிருந்தான். “அனுமக்கொடி பறக்க வந்து நின்ற கிருஷ்ணரும், ஏனையோரும் போருக்கானச் சங்கநாதத்தை முழங்கி விட்டனர். தன் பிரியமான உறவுகளையே எதிர்த்துப் போரிட வேண்டுமா? இதனால் பெறப் போகும் பயன் என்ன? எனச் சிந்தித்த அர்ஜுனன் கடும் மனக்குழப்பத்தில் ஆழ்ந்தான்.
தேரை இன்னும் அருகே ஓட்டி களத்தின் நடுவே நிறுத்துங்கள் அச்சுதரே! எனக் கிருஷ்ணரிடம் கூறினான் அர்ஜுனன். கிருஷ்ணரும் நான்கு வெண்ணிற குதிரைகள் பூட்டப்பட்டத் தேரை போர்க்களத்தின் நடுவே ஓட்டி வந்து, இருபக்கப் படைகளுக்கும் நடுநாயகமாக நிறுத்தினார். தன் உறவுகளை நெருக்கத்தில் பார்த்த அருச்சுனன் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி நாவறள, உடல் சோர்ந்து காண்டீபத்தை நழுவ விட்டு , தேர்தட்டிலேயே அமர்ந்துவிட்டான்.
என் உறவுகளையே அழித்து நாட்டை ஆள்வதைவிட, மீண்டும் கானகமே செல்வேன்! என்றான் அர்ஜுனன். அவனது அறியாமையைப் போக்கி, அவனை மன அழுத்தத்திலிருந்து விடுவித்து, உன் கடமையைச் செய் அர்ஜுனா! அதன் பலனை எதிர்பார்க்க உனக்கு உரிமையில்லை! என பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் , ஶ்ரீமத்பகவத்கீதையைப் போதிக்க ஆரம்பித்தார்.
கீதப்பிரியை _ உமா ராதாகிருஷ்ணன் .
1 thought on “இந்துக்களின் புனித நூல் ஶ்ரீமத்பகவத்கீதை! தொடர்-4”